சொல்லத்தான் நினைக்கிறேன்-இலவு காத்த கிளி என்ற மணியனின் கதையும் அதன் சினிமா படமும்.



மணியன் ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராக இருந்தபோது “திருக்குறள் கதைகள்” என்று சிறு கதைகள் ஒவ்வொரு வாரமும் எழுதி கொண்டிருந்தார். அப்படி அவர் எழுதிய ஒரு கதை தான் “இலவு காத்த கிளி. இது நான் படிக்கும்போது, சின்ன வயது,பள்ளி செல்லும் பருவத்தில் இருந்ததால் அதன் தலைப்பின் அர்த்தம் புரியவில்லை. ரொம்ப நாள் கழிந்து தான் புரிந்து கொண்டேன். ஒரு கிளி ஒரு இலவ மரத்தின் பருத்திக்காய் பச்சையாக இருப்பதை பார்த்து இந்த காய் பழமானால் திங்கலாம் என்று அதை காவல் காத்து வந்ததாம். கடைசில் அது வெடித்து பஞ்சு வெளி வந்ததாம். ஏமாறிய கிளி இலவு காத்த கிளியானது.

சரி கதையை பார்ப்போம்.

ஒரு ஆஃபீசில் வேலை செய்யும் பெரியவர் தான் மானேஜராகலாம் என்று கனவு காண்கிறார். அவருக்கு மூன்று மகள்கள். மூத்த பெண் டீச்சராக வேலை செய்கிறாள். இரண்டாவது மகள் வீட்டில் சமையல் செய்து வீட்டை கவனித்துக்கொள்கிறாள். மூன்றாவது பெண் ரொம்ப கலகலப்பாக பழகும் காலேஜில் படிக்கும் பெண். மனைவியை இழந்த அவர் அந்த பெண்களுடன் தனியே வசித்து வருகிறார்.

புதிதாக வந்த மானேஜரை, தனக்கு கிடைக்க இருந்த பதவியை தட்டிப்பறித்தவன் என்ற விரோத மனப்பான்மையோடு பார்க்கும் பெரியவர் பின்னால் அவன் இளஞன், நல்லவன் என்று தெரிந்து வீட்டிற்கு சாப்பிட கூப்பிடுகிறார். வழி தெரியாமல் தெருவில் நின்ற மானேஜரை கடைசி பெண் வீட்டிற்கு அழைத்து வருகிறாள். அங்கு வரும் அந்த மானேஜர் அந்த குடும்பத்தினரின் நற்குணங்களைக் கண்டு விரும்பி, பின்னால் அந்த குடும்பத்துடன் நன்கு பழகி வருகிறான்.

 அந்த கடைசி பெண்ணின் குறும்பு பேச்சும், அவளுடைய கலகலப்பான நடவடிக்கைகளும் அந்த மானேஜரை மிக கவர்ந்தது. அந்த பெரியவருக்கு வேலை போய் விடுகிறது. மிகுந்த கஷ்ட நிலையில் இருக்கும் அந்த குடும்பத்துக்கு தன் வீட்டின் கீழ் போர்ஷனை குறைந்த வாடகைக்கு தருகிறான் அவர்கள் கஷ்ட நஷ்டத்தை தெரிந்து கொள்கிறான். அந்த கடைசி பெண்னை விரும்புகிறான். ஆனால் அந்த பெண் வேறு ஒரு வாலிபனை விரும்புவதை தெரிந்து விட்டு விடுகிறான். இரண்டாவது பெண் அவனை விரும்புகிறாள். ஆனால் அந்த மானேஜர் அவளை தன் நண்பனுக்கு மணம் செய்து கொடுக்கிறான். ஒரு நாள் அவனை சாப்பிட கூப்பிட யாரும் போகாததால் முதல் பெண் அவனை அழைக்க போகிறாள். அவன் அவளிடம் “எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று எரிஞ்சு விழுகிறான். அவ்வளவு அழகில்லாத அந்த பெண் “ஏன் என்னை யாருக்கும் பிடிக்க வில்லை என்று அழுகையுடன் கீழே இறங்கி போகிறாள். மனம் வருந்தி மனம் இறங்கிய மானேஜர் அந்த பெரியவரிடம் அந்த மூத்த பெண்ணை தான் மணந்து கொள்வதாக சொல்லுவதாக கதை முடிவடைகிறது.

ஆனால் இந்த கதையை K. பாலசந்தர் படமெடுத்தபோது அதனை “சொல்லத்தான் நினைக்கிறேன் என்று பெயரிட்டு, கொஞ்சம் மசாலா சேர்த்து முடிவை மாற்றி அந்த மானேஜர் யாரையும் திருமணம் செய்யவில்லை என்று மாற்றிவிட்டார். அப்பெண்களின் தந்தையை கொஞ்சம் பைத்தியக்காரர் போல் சித்தரிக்கிறார்.  படமும் நன்றாக இருந்து நன்றாக ஓடியது. இந்த படத்தில் சிவகுமார், கமல ஹாஸன், S.V. சுப்பையா, ஸ்ரீவித்யா, ஜெயசித்திரா முதலானோர் நடித்திருந்தனர்.

Comments

  1. நான் படித்துக் கொண்டே வருகையில் புரிந்தது இது சொல்லத்தான் நினைக்கிறேன் என்று. ஆனால் இது மணியன் கதை என்று இப்ப தான் தெரிந்து கொண்டேன்.
    திரும்பவும் இந்தப் படத்தைப் பார்க்கும் ஆவலை உண்டாக்குகிறது உங்கள் விமரிசனம்.

    ReplyDelete
  2. நன்றி அம்மா தங்கள் பதிலுக்கு. மணியன் அந்த காலத்தில் நிரைய கதைகள் எழுதி உள்ளார். அவரது 'திருக்குறள்' சிறு கதைகள் நன்றாக இருக்கும். ஒவ்வொன்றும் ஒரு குறளை அடிப்படையாக கொண்டது. தாங்கள் 'தேக்கடி ராஜா' படித்தீர்களா? ரொம்ப நன்றாக இருந்த நெடுங்கதை. எனக்கு நினைவு உள்ளதை வைத்து எழுதினேன். படித்து பாருங்களேன்.
    மீண்டும் நன்றி.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete

Post a Comment